கவிதை பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம்
இஸ்லாம் கவிதையை சிறந்த இலக்கிய வடிவமாக்க கருதுகின்றது. அது இலக்கோடு கூடிய அழைப்பாக இருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றது அதே நேரம் கவிஞர்கள் என்போர் இருக்கின்றவற்றையும் இல்லாதவற்றையும் கற்பனை செய்து கொண்டு கற்பனை திடல்களில் எல்லாம் சத்தமிடுபவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றது. கவிஞனின் சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காதவகையில் உயர் ஒழுக்கத்தைத் தகர்க்காத வகையில் அல்லது நம்பிக்கைக் கோட்பாட்டையோ ஒழுக்கத்தையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்காத வகையில் அவன் விரும்பியதை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை இஸ்லாம் கவிஞனுக்கு வழங்கியுள்ளது.
இஸ்லாம் கவிதையை இகழுமாயின் அது சமூக சீர்கேட்டுக்கு அழைக்கிறது என்றே பொருளாகும். விக்கிரக ஆராதனை கவிதையை அது இகழுகின்றது. ஏனெனில் இஸ்லாம்; மூடநம்பிக்ககைளை ஒழிப்பதற்காகப் போராடும் மார்க்கமாகும். மானக்கேடான செயல்களின் பால் அழைக்கும் கவிதையையும் அது தடுக்கின்றது.
இஸ்லாம் கவிதையைப் புகழுமாயின் இரண்டு காரணங்களுக்காகப் புகழுகின்றது என்று பொருள்.
ஓன்று இக்கவிதை சன்மார்க்கத்தின் பக்கம் அழைக்கும் என்பதால் இவ்வாரான கவிதைக்கு இறைத்தூதர் ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார். மற்றது அழகியலோடு வெளிப்படும் கவிதை எதனோடும் மோதாத தீமைக்கு அழைக்காத கவிதை இவ்வகையுள் அடங்கும். இவற்றை இறைத்தூதர் கேட்டு ரசித்துள்ளார்கள்.
கவிதையைப் பொருத்தவரையில் இஸ்லாத்தின் நிலைப்பாடு ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் கவிதையை மறுத்து விட்டு பின்னர் ஏற்றுக் கொண்ட இரட்டை நிலைப்பாட்டை இஸ்லாம் எடுக்கவில்லை அல்லது இறைத்தூதர் இஸ்லாத்தின் ஆரம்பத்தில் கவிதைக் கெதிரான நிலைப்பாட்டை கொள்ளவுமில்லை. பின்னர் மதீனாவில் சார்பான நிலைப்பாட்டை எடுக்கவுமில்லை. மூன்றாவதாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவுமில்லை. இதனால் நாஸிக் மன்சூக் என்றுகூற சட்டங்கள் வரவுமில்லை. ஏனெனில் ஹிஜ்ரத்திற்கு முன்பும் அதன் பின்பும் கவிதையைப் பொறுத்தவரை ஒரே நிலைப்பாடுதான் இருந்தது.
குர்ஆன் கவிதையல்ல என்பதற்கும் நபி (ஸல) அவர்கள் கவிஞரல்ல என்பதற்கும் கவிதையைப் பொருத்தவரை இஸ்லாத்தின் நிலைப்பாடு என்பதற்குமிடையில் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
கவிதை விமர்சனம் என்பது கவிதை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்துடன் தொடர்புபட்டது. நபித்தோழர்கள் கவிதை விமர்சனத்தில் பெயர்போனவர்களாக விளங்கினர். உமர் (றழி) அவர்கள் கவிதையின் உண்மைத் தன்மை வார்த்தையில் சிக்கலும் அறிதான பொருள் கொள்வதில் சிக்கலான வார்த்தைகளைத் தவிர்ப்பதையும் விரும்பினார். நற்சிந்தனையை, தூய உணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளை அவர் வெகுவாக ரசித்தார் எனவேதான் கவிஞர் சுஹைர் அவர்கள் உமர் (றழி)யை பல கட்டங்களில் பாராட்டியுள்ளார்கள்.
தூய்மை, பலம், உறுதி, திடம் என்றவகையில் இஸ்லாத்தின் கண்ணோட்டம் ஒரு போதும் கவிதையின் பார்வையில் தடையாக இருக்காது. கவிதையின் வெளிப்பாட்டை, வளர்ச்சியை கட்டுப்படுத்தவுமில்லை. அதற்கு மாற்றமாக அதன் வளர்ச்சிக்கு வித்திட்டது. அதனை சரியான திசைக்கு திருப்பி விட்டது என்பதே உண்மையாகும். ஜாஹிலிய்யக் கவிதைகளோடு இஸ்லாமிய வரலாற்றுக்காலக் கவிதைகளை ஒப்பிட்டால் அளவிலும் இலக்கியத் தரத்திலும் எந்தக் குறையும் இருக்கவில்லை.
இஸ்லாத்தில கவிதையின் ஆதார நூலகள்
இஸ்லாத்தின் ஆரம்பகால கவிதைகளின் மூலங்களாக விளங்குவது நபிகளாரின் சுயசரிதை நூல்களே இந்தவகையில் முதலாவது சுயசரிதை நூலான சீறா இப்னு இஸ்ஹாக் அழிந்து விட்டது. அதன் குறிப்புக்கள் இரண்டாவது சுயசரிதை நூலான சீறா இப்னு ஹிஸாமின் நூலில் காணலாம். இதைக் குறிப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அதில் அதிகளவில் கவிதைகள் இடம்பெற்றுள்ளமை. இரண்டாவது இந்தக் கவிதைகளின் நம்பகத் தன்மையும் உறுதிப்பாடும் அதாவது அந்த நூலுக்கு எழுதப்பட்ட விளக்க உரைகளில் இதில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் உறுதிப்படுத்தலைக் காணலாம்.
இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் வெறும் வரலாற்று நிகழ்வுகளை மாத்திரம் குறித்துச் செல்லவில்லை. இக்கவிதைகளை அவ்வரலாற்று ஆதாரக் குறிப்புக்களாகவும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இறைத்தூதர் கலந்து கொண்ட போர்கள் அதில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை கொல்லப்பட்டோர் விபரம் போன்ற குறிப்புக்களெல்லாம் அக்கவிதையில் அடங்கியுள்ளன. இதன் மூலம் இறைத்தூதரின் காலத்தில் கவிதை எந்தளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது ஒரு வரலாற்று ஆவணமாகக் கூட இருந்துள்ளது என்பதை இதன்மூலம் விளங்க முடிகின்றது. அதே நேரம் தனி மனிதனை விட சமூக விவகாரங்களில் கவிதை தன் பங்களிப்பை செய்திருப்பதை காண முடிகின்றது.
ஆரம்பகாலக் கவிதையில் அடுத்த ஆதார நூல்களாக நபித் தோழர்கள் பற்றிய சுயசரிதை நூல்கள் கொள்ளப்படுகின்றன. கொள்கைக்காக வாழ்ந்த மனிதர்களைப் பற்றியும் கவிதைகள் பதிவு செய்துள்ளன. இமாம் இப்னு ஹஜரின் அல் இஸாஸா, இப்னு அப்தில் பர்ரின் அல் அஸ்திஆப், இப்னு அதீரின் உஸுதுல் ஆபா, இப்னு ஸஃதின் அத்தபகாத்துர்பரா போன்ற நூல்களைக் குறிப்பிடலாம்.
(தொடரும்)
மாற்று இலக்கியத்தின் தேவை 1 2 3 4 5
தொடர்புடைய பதிவுகள்:












